Sunday, June 17, 2012

உன்னை எண்ணி




நீல வானும்
நீளும் கடலும்
நாளும் நம் வாழ்வில்
நவின்றது பலகோடி ...


உன்னோடு நான்
என்னோடு நீ
ஏகாந்த இரவு
எரிகின்ற உணர்வு ...


உன்னோடு சேர்ந்த
என்னோடான தனிமைகள்
நீள்கின்ற வரம் வேண்டும்


கண்ணோடு கண்கலந்து
கருத்தோடு நீ கலந்து
காதோடு கதை பேசி
கலந்திடும் இரவு வேண்டும்


அணைத்திடும் பொழுதினில்
அலைகின்ற உணர்வுக்கு
ஆர்த்மாத்தமான - உன்
அழுத்தங்கள் வேண்டும் ...


உன்னோடு நானும்
உறவாடும் பொழுதில்
பார் பார்க்கும் மதியவனும்
நம்மை முகில் எனும் கூட்டுக்குள்
பதுங்கித்தான் பார்ப்பானோ ....


அன்றில்
பாராளும் உன் கைகள்
பாவை இவளை ஆளுவது கண்டு
பார்வையிலே வெட்கம் சூழ
போர்வை என முகிலெடுத்து மறைத்தானோ ...


வெண்ணிலவின் ஒளி எடுத்து
வீசுகின்ற தென்றல் தனை பிடித்து
ஓடுகின்ற நீர் கரையில்
ஓவியமாய் எனை நிறுத்தி
காவியம் அதை நீ தீட்ட
காரணமாய் கொண்டாயோ ...


பாவை இவள் மனசிறையில்
பதிந்து விட்ட ஓவியம் நீ
பாதியிலே போனாலும்
பார்த்திருப்பேன் உன்னை எண்ணி