Thursday, December 27, 2012

நம்பிக்கை

ஓரமாய் உன் உள்ள சமவெளியில் 
உடைந்து சிதறிய 
என் காதல் முத்துக்கள் 
கோர்க்கப் படாமலே 
சிதறி கிடந்தது ..
திறந்த சிப்பியும் 
கேட்பார் அற்று 
கவிழ்ந்து கிடந்தது ...
அறுந்து தொங்கும் 
இதய வீணையின் நரம்புகளில் 
சொட்டு சொட்டாய் உதிரும் 
உதிர துகள்களுள் 
கசிந்து ஒழுகியது 
என் காதல் நிணநீர் ..
கேட்பார் அற்று கிடக்கும் 
புல்லாங்குழலின் துளைகளின் ஊடே 
அவ்வப்போது புகும் காற்றின் தீண்டலில் 
இசை உயிர் பெறுவது போல் 
அவ்வப்போது உனக்குள் உதிர்ந்த 
என் காதல் முத்துகளின் உரசலினால் 
தீ பற்றி கொள்ளும் காதல் ...
வெகு தூரம் தாண்டியும் 
உன் எண்ண  அலைகளுக்குள் 
சிக்கி தவிக்க 
என் காதல் சிப்பிகளும் 
கருக்கொண்டு அலைந்தது 
உதாசீனமாய் உமிழப்பட்ட 
உமிழ் நீரின் மோதலில் 
உடைந்த கௌரவ  காந்த புலங்கள் 
எதிரும் புதிருமாய் இன்று ...
வானவில் போல் வரும் 
உன் வர்ணமற்ற காதலுக்காய் 
என் வாழ்க்கை முழுமையும் 
இருள் மேகத்தை சுமந்து வாழ 
என் எதிர் காலம் எனக்கு அனுமதி தரவில்லை 
எட்டி நடக்கின்றேன் 
என்னுடன் கை கோர்த்து 
கூட வருபவன் 
என் காதலனாய் அல்ல 
நல்ல நண்பனாய் 
என் வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டியாய் 
விடியலை நோக்கி அழைத்து செல்வான் ..
என்ற நம்பிக்கையோடு ...நான் .