Thursday, January 10, 2013

சிறு பருவம்

 


நீயும் நானும்
நிழலாடிய மரங்களும்
நினைவாடிய செயல்களும்
குழைந்தாடிய  வனப்பும்
நுழைந்தடிய புனலும்
மனதெங்கும் நினைந்தாடுகிறது ...

நாம் கடந்து வந்த
நம் சிறு பருவம் எல்லாம்
பெரும் பொக்கிசங்களாக
மனதின் ஓரத்தில்
மகிழ்வினை பிரசவித்து கொண்டிருகிறது
நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் ...

நுண்ணிய எறும்பு பிடித்தோம்
நூல் கொண்டு பட்டம் விட்டோம்
தெள்ளிய ஓடையிலே
தெவிட்டாது மீன் பிடித்தோம்
துள்ளிய  கன்றடக்கி
தூய்மையாய் நீராட்டினோம்
மெல்லிய சிரிபொலியில்
மகிழ்வின் எல்லைகள் தொட்டோம் ...

பிஞ்சு பருவம்
நஞ்சற்ற அமுதம் ..
வஞ்சகங்கள் தெரிவதில்லை
வன் செயல்களும் புரிவதில்லை
வருந்தி எதிலும் வாயடியதில்லை
எண்ணியதை செய்தோம்
அதில் ஏற்றதாழ்வு இல்லை
கண்ணியம் குறைந்ததில்லை
களவு ஏதும் இருந்ததில்லை ..

இன்று நாம் வளர்ந்து விட்டோம்
நம் இன்பங்கள் எல்லாம் தொலைத்து விட்டோம்
வெறும் வம்பர்கள் மத்தியல்
எய்யும் அம்பென்று ஆகிவிட்டோம் ..
அது எம்மையும் தாக்கலாம்
பிறரையும் தாக்கலாம்
தாக்கங்கள் நிச்சயிக்கபட்டவை
தடங்கல் இன்றி தன் பயணம் அது தொடரும் ...

இருந்தும் ஆழ்மனதின் ஆசை ஒன்று
ஓசை எழுப்புகிறது
மீண்டும் அந்த பால்ய பருவம்
மீள் எழுச்சி கொள்ளாதோ ...