Tuesday, September 25, 2012

விழி மொழி

 
தென்றலின் சிலு சிலுப்பில்
மழைத்துளிகள்
ஈரத்தை உலர்திகொண்டிருந்த
அழகிய மழைகாலம்...
சிறு சிறு துளிகளாய்
அங்கொன்றும் இங்கொன்றுமென
தெறித்து விழும் துளிகளை உதறி
மரங்கள் தம் உலர்வை உறுதி படுத்தி கொண்டிருந்தது ....

வட்டமாய் ஒரு சிறு நீர் தேக்கம்
அதில் வரி வடிவமாய்
நீர் துளிகளின் அலை வடிவம்
எட்டி நின்று பார்த்தவள் மனதில்
எழுந்து நின்றாடிய சலனங்கள் ..

ஏழடி உயரம்தான் அதில்
எஹ்கு நானின் விறைப்புதான்
சற்றே திரும்பினாலும்
சடுதியாய் சாய துடிக்கும்
சாலை ஓரத்து ரோஜாக்கள்
அவன் பார்வைக்காய் தவம் இருக்கும்
எட்டி நடக்கும் அவன் பாதசுவடில்
எழுதப்படாத பல காதல் கடிதங்கள்
விழுந்து சிதறும் ...
எதற்கும் அசராத அவள் இதயம்
இவன் எடுப்பாய் சிரிக்கும்
புன்சிரிப்பில் தடுக்கி சாய்கிறது...

மனதுள் பல கற்பனை..
இதிகாச நாயகன்
யுகம் தாண்டி பிறப்பு எடுத்தானோ ?
இளமாறன் இவன் இளமார்பை
ஏதும் இளம் பூவை சூடி இருப்பாளோ ?
இவன் பெயர் யாதாய் இருக்கும் ..?
மலர் கண்ணனா ? மன்மதனா ..?
ஸ்ரீராமனா ..? என் சிந்தை கவர்ந்த சீராளனா ?
சிந்தை மயங்க நெட்டி தள்ளும் பொழுதை
நிந்தை செய்தவாறே மன்னன் அவன் வருகைக்காய்
மான் விழியாள் மனம் துவண்டாள் ....

நெட்டி தள்ளிய பொழுதை
குட்டி பொழுதாக்கி ..
அவள் மனக்கதவை தட்டி திறந்த
கெட்டிக்காரன் எட்டி நடை போட்டு வந்து சேர்ந்தான்...
அலர் தாமரை கண்கள் அவளிடம் அவசரமாய் பாய்ந்து மீள
ஆயிரம் கதை சொன்னான்
அன்றலர்ந்த செந்தாமரையாள் அகம் நோக்கி
அவள் புறக்கண்ணால் தேக்கம் கண்டாள்...

மீன் விழியின் தவிப்பு
அவன் தணல் விழிகளுக்கு தப்பவில்லை
அனல் என துடிக்கும் அதரங்களின் அசைவில்
கனல் என அவன் நெஞ்சம் கரைந்து கொண்டு இருந்தது
கருத்த விழியில் குன்றி மணி போல்
குறு குறுத்து கொஞ்சி விளையாடும்
மங்கை அவள் விழி
மாறன் இவன் விழிக்கு விருந்தாகி பலநாட்கள்...

மலர் விழியும் மீன்விளியும்
மனதோடு கலந்து
மருண்டு உறவாடி மகிழ்ந்து விளையாடி
மயக்கும் மொழிகள் பேசி
மது உண்ட வண்டுகளாகி
கூடி பிரியும் குறுகிய அந்த
வண்டி தரிப்பிடத்தில்
எதிரும் புதிருமான
எழில் விழி காதல்
என்றும் வாழ்கிறது
எதிர்கால நம்பிக்கைகளை
பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு ..