Saturday, April 20, 2013

தனிமை

 

இறுக பற்றி
இறுக்கி இழுக்கிறது
தடுக்கி விழுந்து எந்திரித்து பார்த்தபொழுது
என்னை சூழ யாருமில்லை
அது கோரத்தனமான முட்களால்
கீறி உடலெங்கும் உதிரம் உதிர்ந்துகொண்டிருந்தது .

ஒரு கை நீட்டி துளாவுகின்றேன்
உதவிக்கு ஒருவராவது வருவாரென்ற நம்பிக்கையில்
யாரும் தென்படவில்லை
அது  தன் வேலையை தொடர்ந்தது .

கீறிய வடு எங்கினும்
மரண வலியை  பிறப்பித்து சிரித்தது அது .
விடுதலைக்காக ஓர் வழியை தேடினேன்
எல்லா கதவுகளும் அடைபட்டு கிடக்கிறது .
அது தன் வேலையை தொடர்கிறது

அழுதேன்.. உரக்க அழமுடியாத சூழலில்
உதவி தேடி அழுதேன்
ஒருவரையும் காணோம்
என் உயிர் துடிப்பு ஒருவர் காதுக்கும் எட்டவில்லை
விம்மலில் முடிந்தது தேடல்
அது தன் கரம்கொண்டு குரல் வளையை நசித்து ..

சண்டை காரன் காலில் வீழ்வதே மேல்
சரணாகதி அடைந்தேன்
எனை ஆரத் தழுவியது
அது என்னை அரவணைத்து கொண்டது .

சமாதி

 

எங்கோ தொலைவினில்
என் நினைவுகளின் படர்தல்
நிச்சயப் படுத்திக் கொள்கிறது
என்னுள் உன் இருப்பை

உறையும் பனிப் பாறை என
உன் நினைவுகளின் இருப்பும்
உன் நிஜங்களின்  இல்லாமையும்
இறுகி உறைகிறது இதயமெங்கும்

நீ வேண்டும்
என் ஆன்மாக்கு  உயிரூட்ட
உலர்ந்து உதிரும்
ஒற்றை ரோஜா இதழ் போல
என் எண்ணக் கனவுகள் அனைத்தும்
ஒவோன்றாய் உத்திர ஆரம்பித்து விட்டது
இன்னும் சில மணித் துளிகளில்
அவற்றின் சமாதி நிர்ணயிக்கப் பட்டுவிடும் .

ஓர் ஜாமத்தில்
ஒற்றையாய் காய்கின்ற இந்த நிலவு
என்னுள் உன் விம்பத்தை
வார்த்து மௌனிக்கின்றது
ஆசைகளும் ஆர்வங்களும்
எரிந்து கருகும் வேளையிலும்
ஒற்றை தலையணை
உன் பெயர் சொல்லி நனைகிறது .

ஒரு கணம் உன் அணைப்பை தேடும் உள்ளம்
மறு கணம் உன் இன்மையின் நிஜத்தில் எரிகின்றது
இந்த தவிப்புக்கள் எல்லாம்
எட்டி நின்று தன்  கூரிய நகங்களால்
என் இதயக் கூட்டை பிய்த்து
வடியும் உதிரத்தை உறிஞ்சும் பேய்கள் என
வதைத்து சிதைகின்றது ..

இந்த இரவை பற்றி பிடித்திருக்கும்
வெண் பணியை போல
என்னை பற்றி படரும் உன் நினைவுகள்
மெல்ல மெல்ல படந்து உறைகிறது உணர்வுகளில்

பாதைகள் அற்ற
என் இதய வீடுக்குள்
நீ வந்து போகும் ஒற்றையடி பாதை கூட
மெல்ல அடைபடும் ஓசை கேட்கிறது ..
தனிமைகளை விதைத்து செல்லும்
உன் பயணம் தொடங்கிவிட்டது
தடுமாறி தடம் மாறி என் பயணம்
அதை பற்றி படர்கிறது .