Wednesday, September 19, 2012

தரிசனம் தந்துவிடு

 
தெருவோரமாய் சில சில்வண்டுகள்
சிரித்து சென்றது போல்
மனதோரமாய் சில
மகிழ்வோசைகள் உரசி சென்றது ..
நிலவும் இரவும்
உரசி கொள்ளும் இராக்காலம்
அவன் நினைவும்
என்னை உரசிக்கொண்டு
உலா போகும் ...


ஏகாந்தமாய் இரவினை தழுவும்
இனிய தென்றலும்
அவன் மகரந்தங்களை
மனதுள் வீசி செல்லும்
நினைவுகள் கருக்கொண்டு
கனவுகளை பிரசவிக்கும் ..
அந்த இன்பங்களின் வெளிப்பாடாய்
சிரி பூக்கள் உதட்டில் பூக்கும் ...


நீண்ட நாசியும்
மதுவில் தோய்ந்த
மயக்கத்தோடு கண்களும்
கோவை இதழ்களை
காவு கொள்ளும்
பரந்த இதழுடன் வாயும்
பாவை எண்ணத்துள் வந்து
பருவத்தை கிறங்கடிக்கும் ..


ஒரு வாய் அமுததுக்காய்
உலகமே வெறுக்கும்
அவன் அருகாமைக்காய்
அங்கம் ஏங்கும் .
ஏக்கத்தின் வரட்சி
மனதினுள் இறங்கி
உதட்டினை உலர்த்தும் ..

இன்ப கனாவை
இரவல் எடுத்து
துன்ப லகரியில்
துவண்டு மருளும்
கண்கள் தனுக்கு
காட்சி கொடுக்க
அன்பே ஒரு முறை
தரிசனம் தந்துவிடு