Friday, October 6, 2017

( என் )மரணம்.

விரும்பியோ
விருப்பமின்றியோ
ஒர் வேண்டுதலாலோ
இரந்தோ
எனை தீண்டி இருக்கும்...

நம்பிக்கைக்கு அப்பால்
அவநம்பிக்கையின்
சில கரங்கள்
என் இருப்பினை
நிச்சயப் படுத்த எத்தணிக்கும்..

நெஞ்சுக் கூட்டின்
ஈரம் உலர
சுமந்த வயிறு
சுடுகாட்டு தீ சுமக்கும்..

ஆண்பிள்ளை அழக்கூடாது...
யார் சொல்லி கேளாமல்
உடன் பிறந்தது
ஊன் உருக
உளறி அலரும்..

தலைமுறை மூத்த
தலைநரையெல்லாம்
தம் இருப்பினை சொல்லி
அங்கலாய்கும்..

கூடப் படித்தவரும்
குளம் குட்டை துழைந்வரும்
மாசில்லா தோழி என
மகுடம் சூட்டி கண்ணீருகுப்பர்..

எங்கோ ஓர் மூலையில்
இழப்பறியா இருமலர்கள்
இயல்பாக கடந்து சென்று
எங்கே நான் என்று
எல்லோரிடமும் வினவக் கூடும்..

கண்ணீர் அஞ்சலியில்
கனத்து கடந்து
நாட்கள் மாதங்களாகி
ஆண்டுக்கொருமுறையென
அளவாக நினைவு கூர்ந்து
அதுவும் அருகி மருவி கடந்திருக்கும்.

இருந்தும்
மாறத புன்னகையோடு
மலர்களின் நடுவில்
என் இருப்பு
இன்னும் பல ஆண்டுகள்
கடந்தும்
சுவர்களில் மட்டும்
நிச்சயப் பட்டிருக்கும்.