Wednesday, October 16, 2013

நீர்க்குமிழி வாழ்க்கை




ஒவ்வொரு நிமிடத்தையும்
உனக்கானதாக
ஆக்கிவிடுகிறது உன் நினைவுகள் ...
உன்னால் உதிர்க்கப் படும் புன்னகைகள்
என் உதட்டில் மிச்சம் வைக்கிறது
அதன் எச்சங்களை ..
உன்னால் எழுப்பப்படும் கேள்விகள்
ஓவொன்றும்
என் சேலையின் மாராப்பில்
சிக்கி திமிறுகிறது
சில நிமிட விடுதலைகள் வேண்டி ..

சந்தேகங்களில் சடுதியாக
புகுந்துவிடும் சிந்தனை சிப்பிக்குள்
ஒரு முத்தென உருவாகிறது
உன் மீதான என் அன்பு ...
காலம் காலமாய்
உறைந்துவிட்ட
உறை நிலை அன்பை
செதுக்கி சிற்பம் ஆக்குவதில்
தீவிரமாய் முயல்கிறது
வார்த்தை உளி ...

எழில் குழையும்
குளத்தருகில்
குழல் தளர கொலுவிருந்து
நிழல் படரும்
நினைவுச் சுகம் புணர்ந்து
கருமணி விழியதனை
மடல் படரும் கணப் பொழுதில்
மொட்டொன்று சட்டென்று உதிர்ந்து
நீராடி நிமிர்கையில்
தெறித்த நீர்த்திவலைகள்
எழுதிச் சென்றது
காதல் ஓர் நீர்க்குமிழி வாழ்க்கையென.

கண்ணீர் இல்லாமல்



என் அனைத்திலும்
அடங்கிவிட்ட உன்னுள்
ஆத்மாவாகிவிட்ட என்
சுயங்களை
சுண்டி இழுக்கும்
நினைவுக் கரங்களின் பிடிகளில்
குழையும்
உன் ஸ்பரிச ரேகைகளின்
உஸ்னம்
உன் புன்னகை கீற்றுக்களால்
குளிர்ந்து விடுகிறது இப்பொழுதெல்லாம்

அடிக்கடி
என் உணர்வலைகளை
உருவகப் படுத்தி பார்க்கின்றேன்
அதில் உருவாகும் நீ
ஏனோ எனக்கு வலியை கொடுப்பதில்லை
மெலிதான உன் புன்னகையில்
மௌனித்துவிடும்
முணு முணுப்புகள்
முத்துக்களை பூக்க வைக்கிறது
முரட்டுத் தனமான
உதடுகளில் .

கடந்து சொல்லும் தென்றல்
ஏனோ கனல் அள்ளி தெளிப்பதில்லை
காதில் கலகலத்து சிரிக்கிறது
உன் சிரிப்புகளை
சிறிது களவாடி இருப்பதனால் ..

இரவினை உருக்கும்
வெள்ளி நிலவின்
ஒளிக்கீற்றும்
ஒன்றும் செய்வதில்லை
உன் முகம் கொண்டு
எனை பார்ப்பதனால் ...


ஒன்று மட்டும் சொல்லிவிட்டு செல்
உன் தேவை எனக்கு இல்லையா
இல்லை
உன்னைப் போல் ஒரு நிழல்
தீண்ட எனக்கு சம்மதமா ?
ஏனெனில்
உன் காந்தப் பார்வையை
தொலைத்த கணம் முதல்
நேற்றுவரை
கலங்கி தவித்த கண்கள்
இப்பொழுதெல்லாம்
முன்னைப்போல்
கண்ணீரைத் தருவதில்லை ..

Monday, October 7, 2013

"தேவதைகள் மண்ணில் பிறகின்றனர்"




வான் பிளந்து
வர்ண வால் நிலவு
வடிவுகொண்டு
வந்து வாஞ்சை கொள்ளுதடி ..

சின்ன சின்ன குறும்புகள்
சிலிர்த்து பூக்கும்
புன்னகை பூக்களில்
தடுமாறி சிதறும் முத்துக்கள்
ஒவொன்றாக கோர்த்தெடுத்து
கொள்ளை கொண்ட மனதில்
கொலுவிருக்கும் உனக்கு
அலங்கரித்து மகிழ்கிறது மனது ...

இறக்கை இல்லாத தேவதை
என் இயல்போடு இணைந்திட்ட பூவை
வளைந்தாடும் சரிந்தாடும்
நுழைந்தாடும் வண்ண நிலவு

யார் சொன்னது
தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லைஎன்று
தேன்மதுர தமிழ் குழைந்து
தேன் ஒழுகும் வார்த்தைகளில்
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும்
தேவ மொழியாம் தேவதையே .

" ஊமையாய் "




பசேல் என பரந்து விரிந்த
ஓர் பாலையின் குளிர்மை என
அந்த அமானுஷ்ய வெளி
அகத்தினுள்ளே ஒரு
அமைதியையும்
அதோ தூரத்தில் தெரியும்
ஒற்றையாய் அந்த ஒரு வீட்டின் அமைதி
மனதினுள்ளே பீதியையும்
புரளவிட்டபடி
என் எண்ணக் குளத்தின்
சலன அலைகளை
சலனம் செய்தவண்ணம் ...

நடுநிஷியின் இருள் அடைப்பில்
போர்வைக்குள் புகுந்து கொண்டு
ஒரு திகில் படம் பார்ப்பது போல்
உள்ளத்தில் ஒரு பீதியை
ஒற்றையாய் அந்த வீடு
உருவகித்து செல்கிறது ...
இருந்தும்
ஏதோ ஒரு உணர்வலையின் உந்துதலில்
பின் இழுத்த கால்களை முன் நகர்த்தி
முடிந்தவவரை என் முழுமைகளை திரட்டி
ஒற்றையாய் இருந்த வீடினுள் ......

ஓர் யுத்தக் களத்தின்
விஞ்சிய எச்சமென
உருக்குலைந்து உருமாறி
உடைந்து கிடந்தது அந்த வீடு ..

உள்ளே ஓரடி வைத்ததுதான் தாமதம்
எதுவோ ஓடி ஒளியும் உணர்வு
பாம்பு ? எலி ? பூனை ? எதுவாக இருக்கும் ?
எதுவென்றால் என்ன ?
விதி வரைந்த அந்த வீட்டின்
நரம்புகளை உணர்ந்திவிடும் நோக்கில்
நகர்ந்த என் கால்களுக்கு
இந்த நினைவுகள் எதுவும்
தடை போடவில்லை ..

சுவர்களில் அங்கும் இங்கும்
அலங்கோலமாய் தொங்கிய
அந்த வீட்டின் குடும்பப் படம்
குலைந்திருக்குமோ ?
குடி முழுகிப் போய் இருக்குமோ ?
சுவரில் ஆங்காங்கே இருந்த
கிறுக்கல்களின் எச்சங்களும்
சிதறி கிடந்த பாதி மண் தின்ற
விளையாட்டு பொருட்களும்
அந்த வீட்டின் மழலை செல்வங்களின்
மந்தகாச வாழ்வினை கண்முன் நிகழ்த்தின
இப்பொழுது எங்கே இருப்பார்கள் ?
அகதியாய் ? அனாதையாய் ?
இல்லை பாழும் இவ்வுலகை விட்டு
பறந்திருப்பார்களோ ?

ஆடைகள் , அணிகள்
பாடப் புத்தகங்கள்
பாத்திரம் பண்டங்கள் என
கரையான் தின்ற மிச்சமாய்
இன்னும் கலையாது கரைந்து
கண்களில் நீர் அரும்ப செய்தது ..

இது ஒன்றா ? இல்லை இது போல் பல
இரக்கமற்ற போர்க் காலனின்
அகன்ற வாய்க்குள் அகப்பட்டது போக
எஞ்சி நின்று எமை எல்லாம் வருத்த ...

ஊரவரின் உறவு கலைந்த நிலை கண்டு
உருவம் தொலைந்த கதி கண்டு
கையறு நிலையில்
ஊமையாய் அழுவதை தவிர
இவளால்
என்ன தான் செய்துவிட முடியும் ?

" தற்கொலை "



இயலாமை
தன் இறுதித் தேர்வுக்கு
ஆயத்தமாகிக்கொண்டு இருந்தது ..

ஏதோ ஒரு விடுதலையின்
வேட்கை கொண்டோ ..
ஒரு விடியலின் ஒளியை
புணர்ந்துவிடும் நோக்கிலோ
ஒரு இறுதிக்கான முடிவை நோக்கி
அது பயணிக்க துடிக்கிறது ...

அதன் இழப்புகளின்
வலிகளை அறிந்தும் அறியாமலும் ..
தான் நொடிப்பொழுது விடியலுக்காய்
தன் உறவுகளை உணர்வுகளை
தியாகம் செய்ய துடிக்கிறது ...

அனைவரது கண்ணிலும்
கருத்திலும் பேச்சிலும்
கோழைத்தனம் என கருதப்படும்
முயன்றால் தெரிந்துவிடும்
முயல்பவன் கோழையா
இல்லை முனகுபவன் கோழையா என்று ...

முயன்று முடியாதவன்
இனி முயலவே முயலாத
முனைவு இது ...
முயன்று பார்த்தவர் பலர்
முயலாமல் தோற்றவர பலர்
முடிந்து போனவர் பலரென
பட்டியல்கள் நீன்றாலும்
இதன் பயணங்கள் ஏனோ
ஆங்காங்கே முடுக்கி விடப்படுகின்றன ..

விடுதலைக்கு முயல்பவனே
விடுகதைக்கு விடைதேடு
விடியல் உன் கண்தெரியும் ..
திரும்பாத ஊர் செல்ல
விரும்பும் உன் செயலில்
வருந்தாத உளமுண்டோ ..
தற்கொலைக்கு போராடுபவனே
ஒரு முறை
தன்னம்பிக்கையோடு போராடு
வாழ்வு வசப்படும் ...

" இடைவெளி "




உனக்கும் எனக்குமான
இந்த உறவின்
உருக் குலைந்த நிலையை
உருவாக்கியது இடைவெளி ..

தூரத்து மின்மினியாய்
அவ்வப்பொழுது
ஒளிரும் உன் பாச விளக்கு
போகத ஊருக்கு வழிகாட்டி ..

பல நேரங்களில்
இடைவெளிகள்தான்
தீர்மானிக்கிறது
இதயங்களின் இருப்பை
பிரிவுத் துயர் சுமந்து
பிரியமுடியா நினைவழைந்து
கருகும் காலத்தின் பிடியில்
உதிரும் ஓவிய சுவர்களாய்
இருப்புக்கள் நகரும்
இன்மையினை தேடி ...

சில சுயநலங்கள்
சிதிலம் அடைந்த
குருதி துகளின்
துர்நாற்றமென
தூர தேசம் வரை
வாடை சுமப்பதும்
இந்த இடை வெளிகளின்
இருப்பின் மீது
அவர்கள் கொண்ட
நம்பிக்கையின் பிடிப்பில்தான் ...

வலி சுமந்து வாழும்
பல இன உணர்வு சுமந்த
இதயங்களை
இந்த இடை வெளிகளும்
பிரிப்பதில்லை என்றும்
இறுதி வரை அவர் தம்
வேட்கையும் துறப்பதில்லை ..

அவ்வளவு ஏன்
இந்த நிமிஷம்
உனக்கும் எனக்குமான
இந்த உறவுத் தூரத்தின்
இடை வெளிகளை
நிரப்பி நிக்கும்
இந்த முகப் புத்தகத்தின்
பல முகங்கள்
குரோதம் , வஞ்சம்
அன்பு , காதல்
ஆசை , ஆளுமை
என அனைத்து முகம் கொண்டும்
நிரப்பி விடத் துடிக்கிறது இடைவெளியை ..
நிரம்பி விடுமா இடைவெளி
இல்லை நிரம்ப விடுவாயா இதயத்தில் நீ ...?

" நடைப்பிணம்.... "



அவள் நினைவு மலர்களை
சுகிப்பதிலேயே
சுகம் காணுகிறது மனது ..
தென்றல் சுமக்கும் நறுமணங்களில்
அவள் மன வாசனையை
நுகர்ந்துவிடத் துடிக்கிறது
மரணித்தும் துடிக்கும் இதயம் ...

குருதித் கலன்களின்
ஒவ்வொரு துகளுக்குள்ளும்
துல்லியமாய் உட்புகுந்து
போதையூட்டும்
அவள் நினைவுச் சிற்பங்கள்
கண்களில் மின்னுகின்றது
கண்ணீர் துளிகளென ...

ஒற்றையடிப் பாதையின்
ஓரங்களில்
ஒற்றையாய் வளர்ந்த
கள்ளிப்பூ ஒன்று
அவள் கடினத்தில் பூத்த காதலை
கணத்தில் நினைவுறுத்துகிறது ..

ஒற்றையாய் பறக்கும்
ஓர் வண்ண பறவையும்
தண்ணிலவாய் காயும்
வெண் நிலவின் மென் ஒளியும்
என் நினைவில் அவள் உருவை
செதுக்கி உறைகிறது பனியென ...

கலந்து பிரிந்த
கைகளின் விரல் இடுக்கில்
பிரியாத பிரியங்களின் ரேகைகள்
நம் காதலின் ஆயுளை
கூட்டி குளிர்விக்காதோ ?

இணை பிரிந்த அன்றில் என
உனைப் பிரிந்த நான்
ஒற்றையாய் உலவுகிறேன்
இலை உதிர்த்த
மரத்தின் கிளைகள் எல்லாம்
பசுமைக்கு ஏங்குவது போல்
உன்னை எண்ணி
அனைத்தும் இழந்து தவிக்கும்
என் இருதயம்
உன் நினைவு சுமந்து வாழ்கிறது
நடைப்பிணமென .

" விளிம்பு "


எதிர் பார்ப்புகளின் விளிம்புகளில்
ஏமாற்றங்களையும்
எதிர் விளைவுகளையும்
எழுதிச் செல்கிறது
தோல்வி ....

எண்ணிலடங்காத
எண்ணக் குவியல்கள்
வண்ணம் இழக்கிறது
வாழ்வு
தன்னை இழக்கும் தருணங்களில் ...

இதழ் விளிம்பில்
நெளிந்து குலைந்து
அவிழும் புன்னகை மொட்டுக்கள்
இனம் புரியாத
கிளர்ச்சி ஒன்றினை
இருதயத்தில்
பிரசவித்து பிரவாகித்து கொல்கிறது ...

மேக விளிம்பில்
தட்டிக்கொள்ளும் மேக மூட்டமும்
மின்சாரப் பாய்ச்சல் என
உடைந்து சிதறுகிறது
மழைத் துளிகள் என ...

பேனாவின் விளிம்பில்
கசிந்து உருகும் மை
பொய்மைகளை கிறுக்குவதை விட
ஊமைகளான உண்மைகள் பலவற்றை
உடைத்து எழுதுவதிலே
தன் உயிரை மாய்த்துக் கொள்கிறது
கர்வத்துடன் ..

விடுதலைப் போர்களின்
வீரர்கள் அனைவரும்
தம் சாவின் விளிம்பில்
கையொப்பம் இட்டு செல்கின்றனர்
விடுதலையின் வேட்கையை ...

உதிரும் பூக்களின்
சுமைதாங்கும்
காம்பின் விளிம்புகள்
கர்வம் கொள்கின்றது
தன் தலை தாங்கிய பூவொன்று
தாய் மண் காத்தவனுக்கோ
தலைவன் கை கொண்டு
தலை முடியில் சூடுவதட்கோ
அன்றில்
தன நிகரில்லா பரம்பொருள்
சேர்வதற்கோ
ஒற்றையாய் தவம் செய்ததாக ...

மரணத்தின் விளிம்பிலும் சரி
மயக்கத்தின் விளிம்பிலும் சரி
உன்னதமான காவியம் ஒன்றை
உலகுக்கு கொடுத்து விடலாம்
உறுதிகள் உள்ளத்திருந்தால் ..

" காதல் இப்படியாம் .. "



ன்னிடமும் உன்னிடமும்
புரண்டு தவழும் காதல் குழந்தை
பல கைகளில் மருண்டு விழிக்கிறது ...
காதல்
கலவிக்கென்பார்
கரைபுரண்ட அன்புக்கு என்பார்
மடை திறந்த உள்ள மருளுக்கு என்பார் ..
இவை அனைத்தும் கலந்த
குழந்தை என்கிறோம்
நீயும் நானும் ...

நெடுந்தூர பயணத்தின்
சக பயணிகள் என
காதல் அவ்வப்பொழுது வந்து
தரிப்பிடங்களில்
இலகுவாக விடை பெறுகிறது இன்று ..

அடுத்த தரிப்பிடத்தில்
அனாவசியம் என உத்தர நினைக்கும்
உள்ளங்களை கூட
மருட்டி மடிய வைத்து ருசிக்கிறது ..

மனதைப் பற்றி பேசும் பலரும்
அதை மரணம் வரை பேசுவதாய் இல்லை
அழகைப்பற்றி பேசும் எவரும்
அழகை ஆராதிப்பவராயும் இல்லை ..
காமம் பற்றி பேசும் எவரும்
களிப்புண்டு தீர்த்தாரில்லை ...

எனில் காதல் என்பது யாது ?
கருத்தொருமித்து
கண்கவர்ந்து
கடைக் கண் பார்வை பகிர்ந்து
உள்வாங்கி உரமான
அன்பென்று சொல்கிறோம் நாம் .

விழி உதிர்க்கும் நீர் மணிகள்
காதல் கறைகளை
கழுவிச் செல்கிறது ...
இதழ் உதிர்க்கும்
புன்னகை ஒன்று
இதயத்தின் வடுக்களை
ஆற்றிச் செல்கிறது
எனவே இன்றெல்லாம்
காதலும் நீடிப்பதில்லை
காதல் தோல்விகளும் நீடிப்பதில்லை ..

இதையும் நாம் தான் சொல்லி கொள்கிறோம்
இங்கே நீயும் நானும்
அவன் , அவள் , அவர்களாகி
அனைவருக்குமான
ஒருவராக
பேசிக் கொள்கிறோம்
இன்றைய காதல் இப்படியாம் ..

" கலைந்த பொய்கள் "



எழுத்துப் பிழை இன்றி
இலக்கணமாக
இலக்கியமாக
இன்னும் பலவாக
வடித்து விடுகிறாய்
என் மீதான
உன் ஆசைகளை ....

கோடுகளாலும்
புள்ளிகளாலும்
வர்ணத் தெளிப்புகளாலும்
எதுவோ ஒன்றை வரைந்து
அதற்க்கு என் பெயர் சூடி
வழிபடுகிறதாக சொல்கிறாய் ...

மொட்டவிழும் முடிச்சுக்களில்
கட்டழகு கவிந்து
குலைந்து குவிவதாக
பட்டழகு மேனியின்மேல்
போர்த்திக்கொள்ளும்
பாவை என்
பாலாடையன்ன மேலாடையாக
படர்ந்துவிட
ஆசை கொள்வதாக
பிதற்றிக் கொள்கிறாய் ...

எண்ணிக் கொள்ளும்
நிமிட மணித் துளிகளும்
எண்ணி எண்ணுகின்ற
அனைத்துக் கால துளிகளும்
ஓர் குளிர்ந்த நீரோடையின்
பிரவாகம் போல்
உன்னை படர்ந்து
ஸ்பரிசிக்கும் என
கற்பனைகள் விரிக்கிறாய் ...

மெல்ல நடக்கும் தென்றல் என
என் மேனி உருக் கொண்டு
தத்தி தவழும் கிள்ளை முகத்தில்
உன் பிள்ளை முகம் தேடி
சலிப்பதாய் சலித்துக் கொள்கிறாய் ...

வெள்ளிக் கம்பிகளென
மேல் படரும் நரை முடியும்
என் முதுமையின் கம்பீரம் கொண்டு
மினு மினுத்து சிரிக்கும் பொழுது
உன் கரம் கொண்டு
மென்மையாய்
மெல் சுகந்தம் அள்ளும்
மல்லிகையின் சரம் கொண்டு
குழலாடும் தருணங்களிலும்
உன் கூட இருப்பேன் என
என் நெஞ்சள்ளி சிரிக்கிறாய் நீ ...

என் மறுப்புகள் எல்லாம்
என்னை மறுதலித்து
உன் கரம்பற்றி
என் காதலை கிறுக்கி செல்கிறது
ஒரு முத்த ஒற்றுதலில் ...
கலைந்த பொய்கள்
கலகலத்துச் சிரிக்கிறது
துகில் கலைந்த நாணத்துடன் .

" ஒரு கணம் "




ஒரு கணம் சிந்தித்திருக்கலாம்
உணர்வுகளுக்கு ஆட்பட்டு
உயிர் உருவும் உந்துதல் பெறுதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

கன்னி கழல் இழுத்து
கால் கொலுசு அறுத்து
குலம் சிதைக்கும்
கொடும் பாதகத்தை
கூட்டமாய் செய்வதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

காதலால் கைபிடித்து
காலமெல்லாம் கால் பிடித்து
கடமை செய்யும் மனையாளென
கைகள் நீளும் முன்
ஒரு கணம் நினைத்திருக்கலாம் ...

வாழ வந்த பெண்
வம்ச விளக்கு ஏந்தும் மகள் என
மறு மகள்
அவளை தீக்கிரை ஆக்குமுன்
ஒருகணம் நினைத்திருக்கலாம் ...

ஊர் வெறுத்து உறவறுத்து
உத்தமன் என ஒருவனுடன்
தடை தாண்டிய ஒருவளுக்காய்
ஊரை கொளுத்துமுன்
ஒரு கணம் யோசித்திருக்கலாம்

உனக்கென்று வீடுண்டு
உன் வரவுக்காய் ஏக்கமுண்டு
உன் சகோதரியாய் , மனைவியாய்
அவள் ஈன்ற உன் உயிர்க் கருவாய்
உன்னையே உயிராக மதிக்கும்
உன்னவர்கள் இருப்பாரென்று ...

அவர் உயிர் அறுந்தால்
உணர்வறுந்தால்
உன் உணர்வுகள் எப்படியென்று
ஒரு கணம் நினைத்துவிட்டால்
உலகில் குற்றம் குறைந்துவிடும்
உறவுகளின் கண்ணீரும்
அர்த்தம் பெறும்.

" வரதட்சனை "



சுட்டெரிக்கும் சூரியன்
தன் தணல் நாக்கை
கட்டுக்குள் கொண்டுவந்து
கனிவாக மாறிக்கொண்டிருந்த
ஓர் மாலை வேளை ..
வீடு பரபரப்பில்
ஆழ்ந்து வண்ணம் இருந்தது ...

கரை பெயர்ந்துவிட சுவரின்
காட்டமான பல்லிளிப்பை
காலண்டர் வைத்து
மறைத்துக் கொண்டிருந்த தம்பி ...
சமையல் அறையில்
சுடப்பட்ட பஜ்ஜியில் மிச்சரில்
தன் வியர்வை துளிகளை
அலட்சியம் செய்து
எண்ணெய் ஒற்றி எடுத்துகொண்டிருந்த அம்மா ,,
ஒரு மெத்தனத்தோடு
தோளில் துண்டை உதறிப் போட்டவண்ணம் அப்பா
தங்கை .....எங்கே ?
சிறிது காலமாக
இந்தமாதிரி நேரத்தில்
காணாமல் போய்க்கொண்டிருந்த அவள் தரிசனம் ...
வரும் மாப்பிள்ளை
தங்கையை கேட்டுவிட்டால் ...?

சிந்தனையின் போக்கை
சிதறடித்த அன்னையின் குரல்
தங்கம் ... அலங்காரம் பண்ணலியோ
நேரமாகிட்டுது ....!!
பாத ரசம் பெயர்ந்த
அந்த பழையகால கண்ணாடி முன்
முகம் தெரியும் இடங்களை தேடி
உயர்ந்து குனிந்து சரிந்து
விழிகளுக்கு அஞ்சனமிட்டு
இயற்கையாய் சிவந்த உதடுகளை
சிறிது எண்ணெய் தடவி மினுங்க வைத்து
குண்டு மல்லி சரத்தை கொத்தாக வைத்து
நாகரீக போர்வையில் கலர் வளையல்கள்
கழுத்தாரம் ஜிமிக்கி மாட்டி
மெல்லிய மஞ்சள் நூல் சேலையில்
தங்கம் , தங்கமின்றியே ஜொலித்தாள் ...

நிறைவாக பார்த்தவள் முன்
பழைய நினைவுகள் நிழல் ஆடியது ..
என் பொண்ணு அழகுக்கு
ஆயிரம் மாப்பிள்ளை வருவாங்கள்
அவளை விரும்பி மணக்கக் கேட்ட
அவனின் பொருளாதார திருப்தியின்மையில்
தந்தையின் வாக்கு அது ..
ஆமாம் இன்னும் இரண்டு வருடங்களில்
அவர் சொன்ன கணக்கே எட்டிவிடும்...

அழகுக்கு குறைவற்ற அவளிடம்
ஆஸ்திக்கு குறைவைத்த
ஆண்டவன் குற்றமா ?
அந்தஸ்து அந்தஸ்த்து என
அகம் மகிழ்ந்த வரன் அனைத்தும்
ஆரம்பத்தில் தட்டிக் கழித்த
அசட்டுக் கவுரவ தந்தையின் குற்றமா ?
படித்து வேலை பார்க்கும்
ஒரே காரணத்துக்காக
படிவைத்து அளக்க முடியாத அளவு
பொன் பொருள் வாகன ஆசை கொள்ளும்
மாப்பிள்ளையை பெற்றவள் குற்றமா ?
பெண்ணை பிடித்திருந்தாலும்
பெற்றவள் வார்த்தைக்கு கட்டுப் படும்
மாப்பிள்ளை குற்றமா ?

அழகுண்டு அறிவுண்டு
குணமுண்டு நலமுண்டு
குடும்பம் நடத்தும் பாங்குண்டு
வெள்ளிக் குத்துவிளக்கு
கொண்டு வர வசதியில்லையே
வக்கற்றவர்களுக்கு வாழ்க்கை எதற்கு
வறண்டு போன அவள் உள்ளத்தில்
வற்றாத ஜீவ நதியாக
வரதட்சனை வேண்டாம் என எவன் வருவான் ?

வந்தார்கள் நின்றாள் கொலு பொம்மையென
அழகை வியந்தார்கள்
பலகாரம் பெண் செய்தால் எனும்
பொய்யை புகழ்ந்தார்கள் ..
எங்கள் தாத்தா அப்படி அப்பா இப்படி
என்ற தந்தையின் வரட்டு
கவுரவத்தை கேட்டார்கள் ..
வழக்கம் போல் லிஸ்ட் போட்டு
சீதனமும் கேட்டார்கள்

ஊர் போய் கடிதமிடுவதாய்
உரக்கச் சொல்லி சென்றவர்கள் பட்டியலில்
இவர்களும் உக்காந்து விட ..
அன்னையின் புலம்பல் ஆரம்பமானது
இரவுகளின் பிடியில்
இறைஞ்சும் அன்னையின் குரலுக்கு
தந்தையும் இறங்கி வந்தார் ..

புரோக்கர் பரமசிவத்திடம்
ஒரு பிள்ளையின் குறிப்பிருக்காம்
பையன் பொண்டாட்டி
இறந்து ரெண்டு வருசமாம் ...


இனி தங்கத்துக்கு திருமணம் நடந்துவிடும் .......

" தேடாதே "



உன் நினைவுகளின் நீட்சியில்
உன் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
நினைவு மலரென நான் ...

அதன் மகரந்தங்கள்
உன் மனக்கருவறையில்
கடந்து சென்ற
பசுமையான நினைவுகளை
கருக்கொள்ள வைக்கிறது ...

உறை நிலைக் காலமொன்றில்
பாதி
உருகி விட்ட பனிப் பொம்மையென
என் உருவச் சிதலங்கள்
உறைந்து உன்னை
உருக்குலைக்கிறது
இருந்தும் சிலிர்த்து
எனை சிந்திக்க தவறியதில்லை நீ ,,,

பூக்கள் நிறைந்த வனத்தில்
உதிர்ந்துவிட்ட பூவொன்றின்
ஸ்பரிசத்துக்காய்
ஒற்றையாய் தவமிருக்கும் தும்பியென
உன் தவம் இன்னும் தொடர்கிறது ..

உள்ளம் கவர்ந்த ஓவியம் ஒன்று
உயிர் உருவிச் சென்றபின்னும்
அதன் நிழல் தேடி அலையும்
உன் மன விசித்திரம் ..
உனக்கும் எனக்குமான
பிரிவுப் பத்திரம்
உன்னை அறியாது
என்னால்
கைச்சாத்திட்ட பொழுதறிந்து
உடைந்து சிதறிய உன் மனவலி கண்டு
என் ஆத்மா உருகி உன்னை அணைத்தது
நீயறிய வாய்ப்பில்லை ..

காலம் கடந்து சென்றாலும்
கடந்துவிட முடியாத உன் காதல்
அடிக்கடி என்னை கட்டி அனைப்பதனால் தான்
உன் கை வளைவில் இருந்து
என் ஆத்மா கரைந்துவிட முடியுதில்லை ..

எங்கும் எனைத் தேடுகிறாய்
எதிலும் எனை நாடுகிறாய்
உன்னருகே தான்
உனக்கு பிடித்த உடையணிந்து
உனைக் கவரக் கால்க்கொலுசணிந்து
ஒட்டி ஒட்டி நடக்கிறேன் தென்றல் என ..
உணரமுடியாமல் நீ
உருவமற்ற நிலையில் நான் ...

அன்பே எங்கும் எதிலும்
எனைத் தேடாதே
ஒரு தென்றல் என
ஒரு நினைவுத் தீண்டல் என
உன்னுள் நான் அற்றுப் போகும் வரை
உன்னருகே தான் இருப்பேன்
எனவே எதிலும் எனை பார்க்காதே
அது அதுவாகவே இருக்கிறது
திரும்ப முடியாத தொலைவு நகர்ந்த
உன் தேவதையை தவிர ....

" விடுபட்ட இதயம் "



பரந்து விரிந்த இரவில்
கவிந்திருந்த இருளின்
இருண்மை கிழித்து
துழாவும் விழிகளின் தேடல்
ஏனோ வெளிச்சத்தின் துணையின்றி
தோல்விகளை தழுவிக் கொள்கிறது ....

முட்கள் நிறைந்த மலர்க்காட்டில்
இடறிக் கொள்கின்ற இதயங்கள்
பூவின் மென்மையை விட
முள்ளின் கூர்மையையே
சட்டென உணர்ந்துவிடுகிறது
கூரிய நாக்கினால்
கிளித்துவிடப்பட்ட இதயம்
குருதிக் கசிவுடன்
அதன் எரிவை தவிர்க்க
குளிரும் நீர்க் குளம் தேடி அலைகிறது ...

எதிர்ப்பட்ட நீர் நிலைகளெல்லாம்
அதன் குளிர்மையை
கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில்
புரண்டு அமிழ்ந்து மிதந்து
நடக்கிறது ....
ஒட்டியதெல்லாம் சேறும் சகதியும்
உலர்ந்த மணலும் தான் ,,,

என்றாகிலும் எப்பிடியாகிலும்
வலியை தீர்க்கும்
எரிவைப் போக்கும்
ஏரியின் தரிசனம் நோக்கிய அதன் பயணத்தில்
எதேச்சையாய் தெரிந்த
ஆர்பரிக்கும் நீர் திவலைகளின்
தரிசனம் கண்டு
அணைத்துவிடும் ஆவல் நோக்கி
கால் நனைத்த பொழுது ஈன்றது
கனல் தகிக்கும் உணர்வை
அதன் உப்புகளை
ஊன் உறிஞ்சி
உவகை துறந்து
விதிர் விதிர்த்து நின்றது
விடுபட்ட இதயம் ஒன்று ...

" காகிதப் பூக்கள் "




மலர்ந்த மொடுகள்
மௌனித்து இருக்கும்
சிவந்த இதழ்களும்
வர்ணம் கலையாது சிரிக்கும்
சிறகுகள் இருந்தும்
தேவதைகள்
அங்கு பறக்காது இருக்கும் ...

வலிவும் வனப்புமாய்
வாடாமல் இருக்கும்
வண்ண வண்ண மலர்கள்
ஜிகினா சகிதம் பளபளக்கும்
பாப்பவரை சுண்டி இழுத்தாலும்
ஏனோ பருவம் எய்தாத
பாவையர் போன்று
பல தோற்றம் காட்டிவிடும் ..

கேலிக்கு ஆளானாலும்
கேள்விக் குறியாய்
நின்று சலித்தாலும்
சந்ததிகள் தாங்கா விட்டாலும்
தன் காலில் நிற்கும் பூக்கள்
வசந்தங்கள் வருவதில்லை
வாசனையும் தெரிவதில்லை
கண்டுகொள்ளும் மனிதருள்ளும்
கறை படிந்த கண்கள் பல
வண்டுகள் தேடா மலர்
மகரந்தம் இல்லாத பூக்கள்
மலர்வதும் இல்லை
மனதை இழுப்பதுமில்லை

ஆசைகள் தோன்றும் வயது
ஆண் பெண் இல்லாத பிறப்பு
தான் என்று நின்றுவிட்டாலும்
தள்ளி வைத்தே பார்க்கும் உலகு
வா என்று அழைத்துச் சென்று
வஞ்சம் எல்லாம் தீர்த்துக் கொள்வார்
பார் என்று சிந்தும் கண் நீரில்
பாரெல்லாம் நனைந்தாலும்
பார்ப்பவர் உள்ளம் கரைவதில்லை ..

காட்சிக்காக அலர்ந்த பூக்கள்
கருக்கொள்ளாத
மலட்டு மலர்கள்
அசைவுகளில் மலர்ந்திட்டாலும்
காகிதப் பூக்கள் மணப்பதில்லை .