Saturday, December 29, 2012

வேளை ...



வெறுமைச் சுவர்களிலெல்லாம்
மோதிக்கொள்ளும் எண்ண அலைகளில்
மிதந்து அமிழ்ந்து உயர்ந்து
உலாவிக் கொள்கிறது தனிமை ..
ஒடுக்கபட்ட மக்களின்
நசுக்கபட்ட குரலாய்
ஒவொரு தடவையும்
ஏக்கத்தின் கேவல்கள்
எட்டி பார்க்கின்றது ..

இணைய முடியா சமந்தரதுள்
இணைந்து
விட்ட இரு மன வெளிகளில்
காலம்
விதைத்து விட்ட சோக விதைகளில்
விருட்சமாய் வேர் விட்டபடி விரக்திகள் ..

கோரமாய் அதன் நகங்கள்
கொடூரமாய் தாக்கிய பொழுதெல்லாம்
ஆறென கண்ணீர்
ஆறாது போனது ..
வாவெனும் ஆசைகள்
வற்றாது இருந்தது
நீ எனும் தேவை
நீங்காது இருந்தது

உன்னோடு என் தனிமைகள்
ஒரு முறை வேண்டும்
கண்ணோடு கலக்கின்ற
கணம் கொஞ்சம் வேண்டும்
மண்ணோடு  மண்ணாகும்
மரணம் ஈயும்
மகத்தான அமைதி கொள்ள
உன் மன ஓரத்தில்
மௌனமான நிமிடங்கள் வேண்டும்

என் கண்ணோடு வழியும்
உப்பு நீர் உட்கொள்ளும்
செவ்வண்ண ரோஜாவும்
என் உள்  வண்ணம் கொண்டு
உயிர் உருகி ஒழுகுது பார் ..
என் உயிர் பருகி
உலவுவதை உவப்பாக செய்பவனே
உன் உயிர் கொண்டு உலாவும்
உன்னதமான வேளை வாய்க்காதோ ..