Sunday, April 21, 2013

பயணம்

 
உடைந்து சிதறும்
என் உள்ள கனவுகள்
உணர்விழந்து
உரிமை துறந்து
ஒருக்களித்து துடிக்கிறது

இந்த இரவு
வராமலே போயிருக்க கூடாதா
இந்த உணர்வு
என்னை தொடாமலே போயிருக்க கூடாதா
யாருமற்ற பாலை நிலத்தில்
எறியபட்ட பூவென கிடக்கிறேன்
என் நீரெல்லாம்
உன் நினைவுகளால் உறிஞ்சப் பட்டு
உமிழப்படுகிறது

என்ன செய்வாய் இந்நேரம்
எதிரே இருப்பவள் இன்பத்தில் இருப்பாளா
உன்னை இழந்து உணர்வை கொடுப்பாயா
என்னை மறந்து இயைந்து இணைவாயா
சொல்லிவிடு
மரண சாசனத்தில் உனக்கான
மறக்கபடாத தண்டனை ஒன்றை நான் எழுத .

உன் உதடுகளின் ஒற்றுதலுக்காயும்
உன் கரங்களின் அத்து மீறலுக்காயும்
ஆன்மாவின் கலவிக்காய்
அத்து மீறி என் இதயம் துடிக்கும் இதே வேளையில்
அனைத்தையும்
இன்னொருத்திக்கு என் சமதமின்றியே
தாரை வார்கின்றாயா ..?

உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு
முற்றுப் புள்ளி தேடி மூச்சு திணறி தவிக்கின்றது
நீ இருந்த இதயம் உன் நினைவு சுமந்த இதயம்
வெளிநடப்பு செய்கிறது ..இன்னும் உன்னை நினைகின்றேனாம் .
முடிந்துவிட்ட காதல் பயணத்தின்
முகாரிகள் இன்னும் முனகியவண்ணம் மனக்கூட்டில் .

என் காதல் இறுதி பயணத்தின் பிரியாவிடை கொடு
முத்தத்தால் வேண்டாம்  அது எச்சில்
முடிந்தால் என் நினைவுகளை எரித்து .
முடிந்துவிடும் பயணம் .

என் இந்த சாபங்கள் ...


நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே ...