****
இந்த இரவின் நீட்சியில்
உன் இன்மைகள்
வெறுமையை
விதைத்து செல்கிறது ...
எழுதப்படாத
ஒரு கற்பனை சித்திரம்
வண்ணமிழந்து
கருக்குலைந்து கலைகிறது
உன் அருகாமைக்காக
அலைகின்ற
மனக்கரங்களின் பிடியில்
உவப்பானதாய்
எதுவுமே அகப்படுவதாயில்லை ...
மழிக்கப்படாத
உன் இருநாள் முக முடியின்
கறுகறுத்த உரசல்களுக்காய்
தவமிருந்து சலித்த உதடுகள்
உரக்க சாபமிட்டுக் கொள்கிறது
முத்த அத்தியாயம்
முடிவடைந்து போனதாம் ...
ஏக்கங்கள்
எண்ணிலடங்கா தாபங்கள்
எழுத முடியா கற்பனைகள்
விசும்பி அழுகிறது
தனிமைகளுடன் இணங்க மறுத்து ...
இருந்தும்
தனிமைக்கும் எனக்குமான பந்தம்
மிக நெருங்கியதாகவே இருக்கிறது ..