Monday, May 27, 2013

இருப்பு

உன் நினைவு சுமந்து
உன் காந்தப் புலங்களை தேடி
கடந்து நகர்கிறது காடுகளை புலன்கள்

கண்ணெட்டும் தூரம் வரை
கரைந்து சிதறும் பனிச் சிதறல்களின்
ஊசிக் கரங்கள் உள் நுழைந்து
உறையத் துடிக்கிறது .
உன் நினைவெனும் நெருப்பு
நீங்காது ஒளிர்வதால்
உறையாது உன்னை தேடுகிறேன் .

காற்றின் திசைக்கு
கடக்கும் ஒவொரு கணப் பொழுதிலும்
உன் வாசத்தை தேடும் சுவாசம்
வஞ்சித்து வருகிறது பெரு மூச்சாக .

ஊசிக் காடுகளின்
ஊசிப் பனிக் கதிர்கள்
உன்னை விடவா
என் உணர்வை பந்தாடிவிடும் ?

தொலைந்து போன
உன் பாத சுவடிகள்
பார்வைக்கு எட்டாது இருக்கலாம்
கடந்து செல்லும் காடுகள் கூட
உன் இருப்பை காட்டாது மறைக்கலாம்
நகந்து செல்லும் பொழுதுகள் கூட
உன் நிழல்களை நெடுஞ தூரம் நகர்த்தலாம்
ஆனால் உன் நினைவு சுமக்கும்
என் இதயம் சொல்லிவிடும்
உன் இருப்பை

No comments:

Post a Comment