Wednesday, October 1, 2014

ஏக்கங்கள் ...




ஓர் நிலவணைந்த
இராக்கலத்தின்
நட்சத்திரங்கள் என
மினு மினுக்கும்
கண்களின் அசைவில்
அவள் கனவுகளை
தேடிக்கொண்டிருந்தான்
அவன் ....

ஒளிவிளக்கின் வரிவடிவில்
செதுக்கிய சிற்பமாக
அசைவற்று
ஒருக்களிந்து சாய்ந்து நிற்கும்
அவள் உருவம்
உராய்ந்து சென்று கொண்டிருந்தது
அவனுள்
மோகத் தீ மூட்டி ...

அலைநின்ற அந்த
கூந்தலின் அசைவில்
அலைந்து கொண்டிருந்தது
மனக்குரங்கு ...

அந்தகாரத்தின்
அமைதிக் கடலில்
அவள் விம்மிய மார்பின்
ஏற்ற இறக்கங்களில்
இளமைப் படகு
அங்கும் இங்கும்
ஆடிக்கொண்டிருந்தது ...

திடீரென கடந்த
ஓர் சாலை வண்டியின் ஒளியில்
அவள் முகத்தில்
சட்டெனப் பதிந்த
பார்வையில் தெரிந்தது
வர்ணமற்ற அவள் சேலையில்
வர்ணகளுக்காய்
அவள் முக ஏக்கங்கள் ...

தென்றல்
இன்னும் வீசிக்கொண்டே இருந்தது
அவன் மனதில் மட்டும்
புயலாக ...

No comments:

Post a Comment