Thursday, August 16, 2012

வளர்ச்சி

 
குரங்கில் இருந்து
குலம் தோன்றியதாய்
குல பெருமை பேசும் மானிடா
குரங்கை விட கேவலமாய்
நீ போன கதை என்னடா ...?

ஐந்தறிவு ஜீவனிடம்
உயிர் பெற்று வந்தவர்தாம்
அணு அணுவாய்
ஆக்கம் கண்டு
அகிலத்தையே
ஆட்டிபடைக்கும்
வித்தைகள் கற்று கொண்டீர்

உன் உழைப்பில்
நீ உயர்ந்த போது
உன் வளர்ச்சியில்
நிமிர்வு தெரியுதடா
உடல் உழைப்பால்
உயர்வுகண்ட உன் நிமிர்வு
இயந்திரத்தின் பிடியில்
இயல்பிழந்து போகுதுபார்

கணனியின் முன்
கட்டிழந்து காலம் மறந்து
கருத்தை பதிபவனே
உன் நிமிர்வு உருக்குலைந்து
போகுது பார் ....
உலகை வென்ற மமதை உன்னுள்
உன்னை வென்ற உவகை உலகுள்

மந்தி இனம் பிரசவித்த
மகத்தான மனித இனம் நீ
ஆனால் உனக்குள்
மமதை மனவீக்கம் என
மாசுகள் நிறைந்து
மருகிழந்து போகின்றாய்

உன்னை பிரசவித்த உன் இனமே
உன் கருவில் உதிக்க மறுக்கிறதே
உனக்கு பிறந்தால்
மந்தி இனமே
மதி இழந்து மகிமை இழந்து போகுமென்றா ..?

மந்தியோடு மனிதனை
மறந்தும் ஒப்பிடாதீர்
ஆறறிவு ஜீவன் என்று
அலம்பல் செய்துகொண்டு
அட்டூழியம் செய்வதற்கு
ஐந்தறிவு ஜீவனாய்
அது போக்கில் வாழ்வது மேன்மையடா ...

வளர்ந்து விட்டோம்
வென்று விட்டோமென
வாய் கிழிய போசுபவனே
நீ உன் வளர்ச்சி பாதையில்
விட்டு வந்த எச்சங்களை பார்
உன் வளர்ச்சியின் மேன்மையும் தெரியும்
வாழ்கையின் நீ இழந்த வசந்தமும் தெரியும்
உன் வளர்சிக்கு தலை வணங்கும் நான்
உன் இழப்புக்கு மனமும் வருந்துகின்றேன் ..

No comments:

Post a Comment