Monday, October 7, 2013

" விடுபட்ட இதயம் "



பரந்து விரிந்த இரவில்
கவிந்திருந்த இருளின்
இருண்மை கிழித்து
துழாவும் விழிகளின் தேடல்
ஏனோ வெளிச்சத்தின் துணையின்றி
தோல்விகளை தழுவிக் கொள்கிறது ....

முட்கள் நிறைந்த மலர்க்காட்டில்
இடறிக் கொள்கின்ற இதயங்கள்
பூவின் மென்மையை விட
முள்ளின் கூர்மையையே
சட்டென உணர்ந்துவிடுகிறது
கூரிய நாக்கினால்
கிளித்துவிடப்பட்ட இதயம்
குருதிக் கசிவுடன்
அதன் எரிவை தவிர்க்க
குளிரும் நீர்க் குளம் தேடி அலைகிறது ...

எதிர்ப்பட்ட நீர் நிலைகளெல்லாம்
அதன் குளிர்மையை
கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில்
புரண்டு அமிழ்ந்து மிதந்து
நடக்கிறது ....
ஒட்டியதெல்லாம் சேறும் சகதியும்
உலர்ந்த மணலும் தான் ,,,

என்றாகிலும் எப்பிடியாகிலும்
வலியை தீர்க்கும்
எரிவைப் போக்கும்
ஏரியின் தரிசனம் நோக்கிய அதன் பயணத்தில்
எதேச்சையாய் தெரிந்த
ஆர்பரிக்கும் நீர் திவலைகளின்
தரிசனம் கண்டு
அணைத்துவிடும் ஆவல் நோக்கி
கால் நனைத்த பொழுது ஈன்றது
கனல் தகிக்கும் உணர்வை
அதன் உப்புகளை
ஊன் உறிஞ்சி
உவகை துறந்து
விதிர் விதிர்த்து நின்றது
விடுபட்ட இதயம் ஒன்று ...

No comments:

Post a Comment