Thursday, October 5, 2017

தனிமை

இருள் புசிக்கும்
தனிமைகளின்
இதழ்களுக்குள்
நம் தனிமை
இங்கும் அங்குமாய் ...
...

அகன்ற தோள்களுக்குள்
அடங்கிவிடும்
அணைப்புக்காக நானும் ..
அழுந்துகின்ற உடலின் மீது
ஆக்கிரமிப்புக்காக நீயும்
அனுதினம் ...

தனிமைகள்
ஒவ்வாமைகளாகி
ஒரு யுகம் ஆனதாய் நினைவு ..
ஒரு முத்த ஒற்றுதலில்
முடக்கிவிடும்
மோகத்தின் விசைகள்
அடங்குவதாயில்லை ..

கை விரல்களுக்குள்
கலந்துவிடும்
உன் நினைவு
ஆயுள் ரேகைக்குள்
ஒளிந்து கொள்கிறது ..

நம் ஸ்பரிசத்துக்காய்
ரோமங்களும்
ஏக்கம் கொள்வதாய்
அடிக்கடி எழுந்து சொல்கிறது ..
தூரங்கள் தொலைத்திடும்
தொலை பேசிகள்
நம்மை தொல்லை பேசிகள் என
வர்ணிப்பதாக கனவுகள் ..

ஓர் தொடுகையில்
ஓர் அணைப்பில்
ஓர் இதழ் ஒற்றுதலில்
தீர்ந்துவிடாத ஏக்கங்கள்
கொட்டிக் கிடக்கிறது ..
வழிந்து வசமிழக்கும் பொழுதெல்லாம்
வரம்பிளக்க துடிக்கும்
ஏக்கங்களுக்கு
உன் என் முத்தச் சத்தங்களே
முகவுரை ...

No comments:

Post a Comment