Monday, April 28, 2014

விடி வெள்ளி...

 
 
 
மினுக் மினுக்கென
மின்னும்
அமாவசை இரவின்
விண்மீன்களை
மல்லார்ந்து
மனக்கணக்கு போடும்
மூளைக்கு ஏனோ
அந்த இரவின் விடியல்கள்
விரும்பப் படாததாக இருந்தது ...

மூடுவதும் திறப்பதுமாக
நித்திரா தேவியுடன்
சண்டையிட்டு
சலித்துக் கொண்டிருந்தது
கண் இமைகள் ...

எழுதிய தேர்வுக்கான
மதிப்பெண்களை
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்
மாணவனைப் போன்றதா இந்த உணர்வு
இல்லை...
தேர்வுதான் எழுதப்படவில்லையே ..
அப்போ
அதிசுவை மிட்டாய் ஒன்றை உண்ண
அனுமதிக்காக காத்திருக்கும்
ஐந்துவயது சிறுவனை ஒத்ததா இந்நிலை ...
உலை நிலை மன நிலை
இரவின் பிடியில்
ஒருவரும் துணையிலை ..

ஒருக்களித்துப் படுத்தவன் கண்களில்
சிறு காற்றில் அசைந்த
ஒற்றைச் சுடர் தீபம்
ஓயாத அதன் போராட்டம்
இன்னும் தீராது தொடர்வது
திடம் ஒன்றை தந்தது ..

ஒரு நாளிகை வாழவே
ஒரு தீபம் போராடும் பொழுது
ஓராயிரம் நாளிகை தாண்டி வாழ
ஒருநாளாவது போராட வேண்டாமோ ...

மல்லார்ந்த கண்களில்
மீண்டும் விண்மீன்கள் படையெடுப்பு
அதில் விடி வெள்ளி ஒன்று
புதிதாய் முளைத்திருந்தது ..
விடியலை நோக்கி ...

No comments:

Post a Comment