Wednesday, July 17, 2013

பித்தனடி

 

வெட்ட வெளியில்
 மெல் ஒளி உமிழும்
ஒற்றை நிலவென
கற்றை கரு முகில் பிரித்து
தொலைந்த தன் காதலனை
பூமியெங்கும் தேடுகிறாள் ..

காதல் பறவைகள் என இணைந்து
உறவுகளின் விலங்குடைத்து
காவியம் பல புனைந்து
கடந்து சென்ற நாட்களின் சுவடுகளில்
பொதிந்த பூக்கள் எல்லாம்
முட்களாய் மாறி
முனைகளை களம் இறக்குகிறதே ..

தினம் தினம் போர்க்களம்
திகட்டி விட்டது அவனுக்கு
விடுதலை வேண்டும் என்று
விண்ணப்பம் கோருகிறான்
விலையாக எது வேண்டும்
விலை உயர்ந்த கார் ?
விண் மீனென மினுங்கும்
அவர்கள் கனவில் கட்டி எழுப்பிய வீடு ?
காலமெல்லாம் உக்கார்ந்து சாப்பிட
ஒரு தொகை பணம் ?
எதுவேண்டும் விடுதலைக்கு ?

வார்த்தையின் வீரியத்தில்
தழுதழுத்த கண்களின் வழி
உயிர் ஒழுகி ஓடி விடுமோ
ஒருபக்கம் திரும்பி நின்று
ஒற்றை விரலால் உள் நிறுத்தி
சட்டென திரும்பி
சடுதியாய் ஒன்று சொன்னாள் ..

பிச்சையாய் இடும் பொருள் வேண்டாம்
என்னிடம் பித்தனாய் நீ இருந்த
அந்த பல நூறு நாட்களில்
பதினைந்து நாள் வேண்டும்
தந்துவிட்டு செல்
போதும் என்றாள் .

என்ன இது புது குழப்பம்
இருந்தாலும் சம்மதித்தான்
விடுதலையின் காற்றென
அவன் விரும்பும்
விவாகரத்து உந்த ..

நாள் ஒன்று நாளிரண்டு
நாளைந்து நாள் எட்டு
எட்டி நின்ற கணவன்
காதலனாய் மாறிவிட்டான்
எந்த கவலைகள் அற்று
கனவுகளின் எல்லைகளை அடைந்தார்கள்
சண்டைகள் இல்லை
சமாதானத்தின் அவசியம் இல்லை
விட்டுக் கொடுத்து கட்டிக் கொண்டார்கள்
அன்றில்களாய் ஒன்றிய பொழுதெல்லாம்
பின்னாளின் அவலங்களை
மனதுக்குள் மறு பரிசீலனை செய்து
தவறென்று கண்டேதெல்லாம்
தனியாக பிரித்தெடுத்து
திருத்தங்களுக்கு தீர்வு கண்டார்கள் .

வானம் வண்ண மயமாகியது
வாழ்க்கை இன்பமயமாகியது
விட்டுக் கொடுப்பதால்
கெட்டுப் போவதில்லை
விழுதுகள் பலம் பெறுகிறது
உணர்ந்தான் உவகை கொண்டான்

பதினைந்து நாள் முடிவில்
பத்திரத்தை கிழித்து
பாசல் இட்டு பாவைக்கு பரிசளிக்க
பட்டுப் புடவை ஒன்றுடன் நாடிய பொழுதில்
கூடை விட்டு குருவி பறந்து
நெடு நேரம் தொலைந்திருந்தது
அவனுக்காய் ஓர் மடல் ..

அன்பே மன்னித்துவிடு
அரைமாதம் உன்னுடன்
அணுவணுவாய் வாழ்ந்துவிட்டேன்
உன்னை பிரிய முடியவில்லை
உயிரை பிரிகிறேன் - உன்னவளாய் .

பூமி அதிரவில்லை பூகம்பம் வரவில்லை
தரை பிளந்து தன்னவளை
கணவனாய் இருந்து
காலனிடம் சேர்த்த தன்னை வைதான்
எங்கு சென்றாய் என் நித்திலமே
நித்தம் உன் நிழலில் நீண்ட என் ஓய்வுகள்
உனிடம் நான் இன்னும்
பித்தன் என்பதை சொல்லவில்லையா ?
விட்டுப் பிரிகையில் வீழ்ந்திடும் என் பார்வை அம்பு
உன் வீணான எண்ண போக்கை வீழ்த்தவில்லையா ?
கட்டிலும் களிப்பிலும் கட்டுண்ட வேளையில்
காமம் மீறிய என் காதலை சொல்லவில்லையா ?

பித்தனடி நான் உன் பித்தனடி
உன் பிரியம் வேண்டுமடி
உள்ளம் வெடிக்கும் உன் பிரிவை
ஒரு அசைவால் தன்னும்
சொல்லிட விரும்பலையோ ?
சொல்லி என்ன ஆகும் என்று நினைத்திருப்பாய்
சுரணை கெட்ட ஆண் பிள்ளை தானே இவன்
எங்கு செல்வேன் ? என்ன செய்வேன் ?
என்னையும் அழைத்துவிடு
இனியொரு ஜென்மம் கொண்டு
உனக்கு தாசனாய் வாழ்ந்து முடிக்க ....

No comments:

Post a Comment